வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
மத்திய அரசின் அனுமதியின்றி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றதாக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் இரண்டு அமைச்சர்களின் வெளிநாட்டு அரசுமுறை பயணம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகனும், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனாவும் சமீபத்தில் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று வந்த நிலையில், மத்திய அரசின் முன் அனுமதி பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலின்படி, இந்த வெளிநாட்டு பயணங்களில் அமைச்சர்களுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்லும் மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை முன்கூட்டியே பெறுவது நடைமுறையில் கட்டாயமாக கருதப்படுகிறது. அதேபோல், அதிகாரப்பூர்வ பயணங்களின்போது டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இதையும் படிங்க: நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!
ஆனால், ராஜ்மோகனும் கீர்த்தனாவும் மத்திய அரசின் அனுமதி பெறாமல், தனிப்பட்ட பாஸ்போர்ட்டை பயன்படுத்தியே அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு அமைச்சர்களிடமும் விளக்கம் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழக அரசுக்கும் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நோட்டீஸில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எவ்வாறு அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், இந்த பயணத்திற்கு தொடர்புடைய நிர்வாக நடைமுறைகளை சரியாக பின்பற்றுவதில் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. மத்திய அரசின் நோட்டீஸுக்கு தமிழக அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதும், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: 3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!