"கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட விடமாட்டோம்!" ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் அதிரடி
கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட சட்டவிரோதமாக அபகரிக்க அனுமதிக்கப்படாது என்றும், கோவில் சொத்துகளை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பழநி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலமோசடி தொடர்பான வழக்கு குறித்து பேசிய அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கோவில் சொத்துகளின் முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணிக்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதற்கட்டமாக பழநி கோவிலின் சொத்துகள் ஆய்வு செய்யப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அறுபடை வீடு கோவில்கள் மற்றும் அதிக நிலப்பரப்புகளை கொண்டுள்ள 50 முக்கிய கோவில்களின் சொத்து விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!
பல இடங்களில் கோவில் பெயரில் ஆவணங்கள் இருந்தாலும், வருவாய் பதிவேடுகள், பட்டா விவரங்கள், நிலத்தின் தற்போதைய பயன்பாடு ஆகியவை சரிபார்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அந்த நிலங்கள் விவசாயம், வணிகம் அல்லது வேறு பயன்பாட்டில் உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படும். மேலும், ஆக்கிரமிப்புகள், குத்தகை விதிமீறல்கள் மற்றும் வாடகை தொகைகள் முறையாக செலுத்தப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
அதேநேரத்தில், சட்டப்படி விவசாயிகளுக்கும், உரிய முறையில் குடியிருக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் மீட்கப்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். கோவில் சொத்துகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவில் நிர்வாகத்தை மேம்படுத்துவது, பக்தர்களுக்கான வசதிகளை அதிகரிப்பது, ஊழியர்களின் நலனை பாதுகாப்பது மற்றும் கோவில் பாரம்பரியம் மற்றும் சொத்துகளை காப்பது ஆகிய நான்கு முக்கிய அம்சங்களில் வரும் ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், கோவில் நிதி தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் கோவில்களில் அதிக செலவில் வசதிகளை உருவாக்குவதற்கு பதிலாக, உண்மையான தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
தற்போது பல்வேறு கட்டண தரிசன முறைகள் உள்ள நிலையில், அவற்றை எளிமைப்படுத்தி இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டு பிரிவுகள் மட்டுமே கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். கோவில்களின் நிதிநிலை மேம்பட்ட பின்னர் கட்டண தரிசன முறையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கோவில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில் நிலங்களின் நிலையை வெளிப்படையாக ஆய்வு செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!