30 நாட்களை கடந்தது முதல்வர் விஜய் ஆட்சி! 50வது நாளை கொண்டாடுவது எப்படி? பனையூரில் இன்று ஆலோசனை!
த.வெ.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் 50வது நாளை எட்டப் போகும் நிலையில், இந்த முக்கிய நிகழ்வை மக்களுடன் இணைந்து கொண்டாடும் வகையில் தொகுதி, நகரம், பேரூர், பகுதி மற்றும் கிளை அளவில் வெற்றி பொதுக்கூட்டங்கள் நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை விவாதிக்கும் மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த முக்கிய கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிதாக இணைபவர்களுக்கு பொறுப்புகள் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் விஜய்க்கு 3வது இடம்! முதலிடம் யார் தெரியுமா? சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?
த.வெ.க. ஆட்சியின் முதல் மாத நிறைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நடைபெறும் வெற்றி பொதுக்கூட்டங்கள் மூலம், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், கட்சி நிர்வாகிகளை மேலும் ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் என்.ஆனந்த், “த.வெ.க.வினர் தங்கள் எல்லையை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியின் முதல் மாதத்தில் மக்கள் நலன் சார்ந்த பல முடிவுகளை எடுத்து வரும் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கும் தயாராகி வருகிறது. இன்றைய மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், வரும் நாட்களில் கட்சியின் இயக்கத்துக்கு புதிய வேகத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியில் இணையும் புதிய உறுப்பினர்களுக்கு உரிய பதவிகள் வழங்கி, அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் உத்தியை இந்தக் கூட்டத்தில் வகுக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். த.வெ.க.வின் இந்த ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் அடுத்த கட்ட விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!