தவெக அமைச்சரவையில் இடம்பெற போவது யார்..? விஜய் முக்கிய ஆலோசனை..!!
அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்கள் யார் என்பது குறித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்கும் நிலையில், அமைச்சரவை அமைப்பு, பொறுப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய அரசின் திசைமுகம் குறித்து ஆலோசித்தனர். இந்த ஆலோசனையின் போது, திருப்பூர் சத்தியபாமா மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்ட மூத்த பெண் தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இவர்களின் அனுபவமும், மக்கள் ஆதரவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, திருப்பூர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவுக்கு தொழில் அல்லது பெண்கள் நலன் தொடர்பான துறை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அரசியலின் பெரும் திருப்புமுனை..! தமிழக முதல்வராகும் விஜய்க்கு சீமான் வாழ்த்து..!
இவர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை அமைப்பு முதல் தேர்தல் பணிகள் வரை முக்கியப் பங்காற்றியவர்கள். குறிப்பாக, ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் அனுபவம் புதிய அரசின் நிர்வாகத்தில் பெரும் பலத்தை அளிக்கும் எனக் கருதப்படுகிறது. இதுதவிர, அருண்ராஜ், விஜய் சரவணன், தமிழன் பார்த்திபன், முகமது பர்வேஸ், கல்லாணை உள்ளிட்ட மற்ற முக்கிய நிர்வாகிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெகவுக்கு ஆதரவா.? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்..!