“பாதம் தாங்கி பழனிசாமி இனி பால்டாயில் பழனிசாமி”... இபிஎஸ் சொன்ன வார்த்தையை வைத்து திருப்பி அடித்த உதயநிதி...!
பால்டாயில், பால்டாயில் என கூறி வருவதால், இனி எடப்பாடி பழனிசாமி இல்லை பால்டாயில் பழனிசாமி. தோல்வியின் விளிம்பில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசி பிதற்றி வருவதாக உதயநிதி ஸ்டாலின் சாடல்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனினும் உங்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக கூறினார். கடந்த 11 நாட்களாக 50 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு சேகரித்து வந்துள்ளதாகவும், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதி என கூறினார்.
கடந்த முறை 10000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பிய நிலையில், இந்த முறை 25000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அனுப்புவீர்களா என்றார். கடந்த முறை சட்டமன்றத்திற்கு அனுப்பியதால், 4500க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி, கொசஸ்தலை ஆற்றில் 17 கோடியில் மேம்பாலம், பாதுகாப்பு தடுப்புச் சுவர், மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகள், சிறுவாபுரி சாலை விரிவாக்கம், காட்டுப்பள்ளி பழவேற்காடு சாலை, மீன் பிடி இறங்கு தளங்கள், மீன் சந்தை மேம்படுத்துதல், பொன்னேரி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள், அலையாத்தி காடுகள் மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து திட்டங்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், இலவச லேப்டாப் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் 1.31 மகளிர்க்கு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும், முதியோர் உதவித்தொகை 2000 ஆக உயர்த்தப்படும் கல்வி உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும் 10 லட்சம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: என்னம்மா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற... ராக் பண்றீங்களா? -பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கலகல...!!
உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் இருந்தவர்கள் போட்டோ போட்டோ என முழங்கினர். போட்டோ கேட்கிறீர்களா என கேட்டு தானே மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீர்களே என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படத்தை காட்டினார். உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை காட்டிய போது கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். போட்டோ கேட்டு கேட்டு தன்னை உசுப்பேத்தி விடுவதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து என்னை பயங்கரமாக திட்டி வருவதாக கூறினார்.
எனக்கு என்ன அனுபவம் உள்ளது என கேட்கிறார் எனவும், இது போன்று யார் காலிலும் விழுந்து பதவி வாங்கிய அனுபவம் எனக்கு கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமி தற்போது பதற்றமடைந்து வருவதாகவும், உதயநிதி சாகாமல் தனது உயிரை வாங்கி வருவதாக எடப்பாடி கூறுகிறார் என்றும், இன்னும் கெட்ட வார்த்தையில் மட்டும் தான் திட்டவில்லை எனவும் வெகு விரைவில் அதையும் செய்துவிடுவார் என்றார். தற்போது பால்டாயில், பால்டாயில் என கூறி வருவதாகவும், இனி அவர் எடப்பாடி பழனிசாமி இல்லை பால்டாயில் பழனிசாமி என உதயநிதி கூறினார். அவருடைய குறி பால்டாயில் உள்ளதாகவும், உங்களது உயிரை எடுப்பது வேலை இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி நல்ல உடல்நலத்தோடு, ஆரோக்கியத்தோடு, பல வரும் அதிமுக நிரந்தர பொது செயலாளராக இருக்க வேண்டும் என்றார்.
அப்போது தான் எங்களுக்கு வசதியாக இருக்கும் எனவும், தற்போது தோல்வியின் விளிம்பில் நின்று என்னை விட்டு விட்டு தலைவரை தூற்றி அவதூறாக வருவதாகவும், தோல்வியில் இருப்பதாக பிதற்றி வருவதாக கூறினார். மோடியையும், அடிமை கூட்டத்தையும் ஓட ஓட விரட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அன்பளிப்பாக வழங்கிய கட்சி துண்டு புத்தகங்களை பெற்றுக் கொண்ட உதயநிதி தொண்டர் ஒருவரின் குழந்தையை அரவணைத்து கொஞ்சி மகிழ்ந்தார். முன்னதாக கூட்டத்தில் ஸ்பீக்கர் சரிவர வேலை செய்யாததால் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சரிவர கேட்காமல் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவை பாஜவிற்கு விற்றுவிட்டார்... எடப்பாடி பழனிசாமியை விளாசிய உதயநிதி ஸ்டாலின்...!