திருமாவளவனை சந்தித்தது எதற்கு? உண்மையை போட்டுடைத்த வைகைச் செல்வன்!!
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் கூறி இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதேபோல் ஆளும் கட்சி ஆன திமுக தமிழகத்தில் முதன்முறையாக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. இப்படியாக இரு கட்சிகளும் தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஈஸ்வரனின் கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் இருக்கின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தான் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இருக்கிறது. அந்த கட்சி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?
இதனிடையே விசிக தலைவர் திருமாவளவனை அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் 2 நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார். இருந்த போதிலும் திருமாவளவன் அதிமுக நிர்வாகியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும். இது முதல் கட்டம்தான். அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களை பார்க்க போகிறீர்கள். \கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். ஆனால் பாமக உடைந்ததற்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொது இடங்களில் கொடிக்கம்பங்கள்.. சின்ன அசைவுக்கூட இல்லை! கலெக்டர்களுக்கு வார்னிங்!