விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரிய வழக்கு…! வாதாட வைகோ ஆஜர்..!
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கில் வாதாடுவதற்காக வைகோ ஆஜராகி உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2013-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் (LTTE) மீதான தடையை நீக்கக் கோரி தொடர்ந்த வழக்கு தமிழக அரசியல் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புடைய மிக முக்கியமான சட்டப் போராட்டங்களில் ஒன்று. இந்த வழக்கு சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டம் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடை அவ்வப்போது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2012-ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் தடையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இந்தத் தடை நீட்டிப்பை உறுதி செய்யும் வகையில் UAPA-யின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 2012 நவம்பர் மாதத்தில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்தே வைகோ உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வைகோ தனது மனுவில், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய ஒரு இயக்கம் என்றும், இந்தியாவில் அது எந்த வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் வாதிட்டார். மேலும், தடை உத்தரவு இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு எதிரானது, போதிய ஆதாரங்கள் இல்லாமல் விதிக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் வாதாடுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி உள்ளார். வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதால் ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!