ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் இருக்கிறது..!! உருக்கமாக பேசிய வைகோ..!!
தவெகவிற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பு இல்லை. திமுக கூட்டணியில் இருக்கும் அனைவரும், கூட்டணியிலேயே தொடர்வார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தலைவர் வைகோ, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையில் புதிய அரசு அமைக்கும் சூழலில், மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய நலத்திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிக்குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்களைப் புதிய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பெருமையை நினைவுகூர்ந்த வைகோ, “இந்த மண்ணில் திமுக தழைக்க பல தலைவர்கள் அரும்பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். கட்சியின் வளர்ச்சிக்காக அவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!
1962 சட்டமன்றத் தேர்தலை நினைவுகூர்ந்த அவர், அப்போது திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றபோதும், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் அண்ணா தோல்வியடைந்ததால் அந்த வெற்றியைக் கொண்டாடவில்லை என்று சொன்னார். அதேபோன்ற மனநிலை இப்போதும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட வைகோ, “அரும்பெரும் சாதனைகளைத் திட்டங்களாக அறிவித்து, முன்மாதிரியான அரசை நடத்திய தளபதி மு.க.ஸ்டாலின் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது” என்றார்.
மக்கள் தீர்ப்பை மதிப்பதாகவும் வைகோ வலியுறுத்தினார். திமுகவைவிட அதிக இடங்களை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட அவர், “மக்களின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்” என்று கூறினார். எனினும், திமுக கூட்டணியின் வலிமையை வலியுறுத்திய வைகோ, “திமுக கூட்டணியை யாராலும் தொட முடியாது. தவெகவுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பே இல்லை. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து ஒன்றாகவே இருக்கும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் தோல்வி திராவிட அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோவின் இந்தச் சந்திப்பு, தோல்வியைத் தாங்கியும் திராவிடக் கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்..! வைகோ நம்பிக்கை..!!