சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!
சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சாம்பாரில் சாணிப்பவுடரை கலக்க, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் மாணவி ஒருவரைத் தூண்டியதாகக் கூறப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியரின் வழக்கமான உணவுப் பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.மாணவர்களின் உயிருடன் விளையாடிய இந்தச் சம்பவம் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி நடந்திருப்பதாகக் கூறிய வானதி சீனிவாசன், இது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
சாணிப்பவுடர் விற்பது சட்டப்படி குற்றமாக இருந்தாலும், சாதாரண மளிகைக் கடைகளிலேயே இது விற்பனை செய்யப்படும் அளவிற்கு அதன் புழக்கம் இருப்பது அச்சமூட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். சாணிப்பவுடரைக் கலக்கத் தூண்டியவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பள்ளிகள், விடுதிகள் மற்றும் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு, சத்துணவு ஆகியவற்றில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சத்திற்காக இப்படியா?... இளைஞர் வாழ்க்கையை சீரழித்த பாஜக பிரமுகர்... தட்டித்தூக்கிய போலீஸ்...!
சமீப காலங்களில் சத்துணவில் பல்லி விழுவது, தரமற்ற பொருட்களைக் கொண்டு சமைப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, உணவுப் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகிறதா என்பதைப் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் தவறாமல் உணவைப் பரிசோதனை செய்த பின்பே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திருடு போன மரகத முருகன்..! அவ்ளோ மெத்தனம்..! மீட்டுக் கொண்டு வர நயினார் வலியுறுத்தல்..!!