"விஜய்க்கு போடும் ஓட்டு பாஜாக-விற்கே!" - விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி!
நடிகர் விஜய்க்குப் போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் மறைமுகமாக பாஜகவிற்கே செல்லும் என்று அரியலூர் பிரச்சாரத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரியலூர் வேட்பாளர் லதா பாலு, குன்னம் வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் வேட்பாளர் கண்ணன் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அனல் பறக்கும் கருத்துகளை முன்வைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று சொந்தச் சின்னத்தைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதற்குத் திமுக தலைமையிலான கூட்டணியே காரணம் என்று திருமாவளவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். "இந்த அங்கீகாரத்திற்கு வித்திட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில், அனைத்துத் தொகுதிகளிலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: "விஜய்யின் வாக்குறுதிகள் பட்ஜெட்டை விட அதிகம்!" - தஞ்சையில் அண்ணாமலை விமர்சனம்!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அதிமுக-வின் கூட்டணி நிலைப்பாட்டைத் திருமாவளவன் கடுமையாகச் சாடினார். நண்பர் விஜய் கட்சி தொடங்கி 'விசில்' சின்னத்தில் ஊதுகிறார். விசில் அடிப்பவர்களைத் திரையரங்கிற்குத் தான் அனுப்ப வேண்டும். விஜய்க்குப் போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் மறைமுகமாக பாஜக-விற்கே செல்லும்.
பாஜக-வுடன் இனி கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவருக்குத் துரோகம் இழைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று பாஜக-வைத் தோளில் சுமக்கிறார். இரட்டை இலைக்கு வாக்களிப்பது மோடிக்கு வாக்களிப்பதற்குச் சமம்.
அதிமுக, பாஜக மற்றும் பாமக கைகோர்த்துள்ள இந்த கூட்டணி, சிபிஐ (CBI) அமைப்பால் அச்சுறுத்தி உருவாக்கப்பட்ட கூட்டணி. இவர்கள் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் சமூக நீதிக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பில்லை.
பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடிக்கவும், அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்சியச் சிந்தனைகளைப் பாதுகாக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் 100% வெற்றி உறுதி. அதேபோல் கூட்டணி வேட்பாளர்களையும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் அவர் மேற்கொண்ட இந்தப் பிரச்சாரம் விசிக மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!