சமூகநீதி வேணாம்! பெரிய துறை தாங்க! அமைச்சரவையில் வேறு துறை கேட்டு அடம் பிடிக்கும் திருமாவளவன்!
'எங்களுக்கு, அமைச்சரவையில் சமூகநீதி துறைக்கு பதிலாக, வேறு பெரிய துறையை வழங்குங்கள்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதால், தமிழக வெற்றிக் கழகம் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது வைத்திருக்கும் சமூக நீதித் துறைக்கு பதிலாக போக்குவரத்து, உயர் கல்வி போன்ற பெரிய துறையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கோரிக்கை த.வெ.க. தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையில் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற த.வெ.க. அரசில் முதலில் ஒன்பது அமைச்சர்கள் இடம்பெற்றனர். பின்னர் மே 23-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது வி.சி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வன்னி அரசு சமூக நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் அமைச்சர் பதவியே வேண்டாம் என முதலில் மறுப்பு தெரிவித்திருந்தார். த.வெ.க. தரப்பில் எந்தத் துறை வேண்டுமானாலும் கொடுக்க தயார் என உறுதியளிக்கப்பட்டும், வி.சி.க. நிர்வாகிகள் சிலரின் எதிர்ப்பு காரணமாக திருமாவளவன் தயக்கம் காட்டினார். இருப்பினும் முதல்வர் விஜய் நேரடியாக பேசி அவரை சம்மதிக்க வைத்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் என்றும் போராடும்... திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.!
ஆனால், துறை ஒதுக்கீடு குறித்து தெளிவான பேச்சு நடைபெறாத நிலையில் திருமாவளவன் ஒரு வார காலம் தொடர்பில் இல்லை. இதனால் வன்னி அரசுக்கு சமூக நீதித் துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வி.சி.க.வின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், “சிறிய துறையிலேயே இவ்வளவு அதிகாரம் கிடைக்கிறதென்றால், பெரிய துறை கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என வி.சி.க. தரப்பில் ஆலோசனை எழுந்ததாக தெரிகிறது. அதன்படி, போக்குவரத்து, உயர் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளை வழங்குமாறு த.வெ.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். “அமைச்சர் பதவியே வேண்டாம் என வெளியில் வீராப்பு காட்டிவிட்டு, இப்போது பெரிய துறை கேட்பது ஏன்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்டணி ஒற்றுமையை பாதிக்கும் வகையில் இந்தக் கோரிக்கை வருவது த.வெ.க. தலைமையை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளிடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் இதை எப்படி கையாளப் போகிறார் என்பதை அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: “புதிய ஆட்சி ஆறு மாசமாவது...” - தவெகவிற்கு ‘க்’ வைத்த திருமா... கூட்டணி குறித்து பகீர் அறிவிப்பு...!