இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது நேர்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரப் பயணங்கள் தொடங்கியதிலிருந்தே, அவரது பிரச்சார வாகனத்தை ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களில் பின்தொடர்வது வழக்கமான காட்சியாக இருந்து வருகிறது. இது உற்சாகத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், சாலைப் போக்குவரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின்போது, விஜய் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சில தொண்டர்கள் அஜாக்கிரதையாக சென்றதால் விபத்துக்குள்ளாகினர்.
இதில் அவர்கள் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினாலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால், பொது மக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொண்டர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், விஜய் பிரச்சார வாகனத்தை எவ்வித வாகனத்திலும் பின்தொடர வேண்டாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும், சாலைப் போக்குவரத்தை சீராக வைத்திருப்பதற்காகவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்பட்ட முக்கியமான வழிகாட்டு நெறிமுறை.
இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!
இருப்பினும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இன்று தஞ்சையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை சிலர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேர் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!