எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பதுரை சாடல்!
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி MGR Legacy -ஐ முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் விஜய் முயல்கிறார் என அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா சம்பவத்தில், முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்கு கொண்டு வர முயல்வதாக அதிமுக எம்பி இன்பதுரை கடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான சத்யபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகிய மூவர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்தார். ராஜினாமா செய்த உடனேயே இந்த நான்கு பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நான்கு தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களே தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!
இந்நிலையில், அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். “தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்.ஜி.ஆர். மரபுக்கும் விஜய் மரபுக்கும் இடையேயான யுத்தம்” எனக் குறிப்பிட்ட அவர், “அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனப்படுத்தி MGR Legacy-ஐ முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் விஜய் முயற்சி செய்கிறார். ஆனாலும் இறுதியில் எம்.ஜி.ஆரே வெல்வார்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் அதிமுகவுக்குள் ஏற்கனவே நிலவும் உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தும் நோக்கில் தவெக திட்டமிட்டு செயல்படுவதாக அதிமுக தரப்பு குற்றம் சாட்டுகிறது. மறுபுறம், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தனிப்பட்ட முடிவு என விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் இப்போது முழுக்க எம்.ஜி.ஆர். மரபு vs விஜய் அரசியல் எனும் போட்டியாக மாறியுள்ளது. நான்கு இடைத்தேர்தல்களும் வரும் காலத்தில் தமிழக அரசியல் சமன்பாடுகளை மாற்றும் வலிமை கொண்டவையாக பார்க்கப்படுகின்றன. அதிமுகவின் எதிர்காலம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவம் எவ்வாறு இந்த சவால்களை சமாளிக்கும் என்பதை அடுத்த சில மாதங்கள் தீர்மானிக்கும்.
இன்பதுரையின் குற்றச்சாட்டு அதிமுகவினரிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசியல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.விஜயபாஸ்கர் விலக திட்டம்?! தவெக பக்கம் தாவலாமா என ஆதரவாளர்களோடு ஆலோசனை!