×
 

“பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டாலும், இன்று பதவியேற்பு விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று உரிமைக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இன்று மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதில் என்ன பேசப்பட்டது, அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகை எவ்வாறு முடிவு எடுக்கப் போகிறது என்பதற்கான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எண்ணிக்கை, ஆதரவு வழங்கும் உறுப்பினர்கள், அவகாச காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநர் விரிவாகக் கேட்டு விளக்கம் பெற்றதாக கூறப்படுகிறது.

நேற்று 112 உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக விஜய் தெரிவித்திருந்தார். அதற்கு உடனடி பதில் எதுவும் அளிக்காத ஆளுநர், 24 மணி நேரத்திற்குள் மீண்டும் விஜயை அழைத்து சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த இரண்டாவது சந்திப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை நாட்கள் அவகாசம் தேவை, சட்டப்பேரவையில் யார் யார் ஆதரவு அளிக்க உள்ளனர், 118 உறுப்பினர்கள் என்ற தேவையான எண்ணிக்கையை எவ்வாறு எட்டப் போகிறார்கள் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தவெகவை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அறிவுறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகைக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு விடுப்பது. அப்படி அழைப்பு விடுக்கப்பட்டால், முதலில் கடிதம் மூலம் தகவல் வழங்கப்படும். அந்தக் கடிதம் தவெக தலைமையிடம் வழங்கப்படும். அதே நேரத்தில் செய்திக் குறிப்பாகவும் ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிடும்.

அந்த அறிவிப்பில், “விஜயுடன் நடைபெற்ற ஆலோசனைகள் மற்றும் ஆதரவு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்” என்று குறிப்பிடப்படும். பின்னர் பதவியேற்பு விழா நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை கட்சித் தலைமையே தீர்மானிக்கும்.

மற்றொரு வாய்ப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணிக்கையில் ஆளுநருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால், அழைப்பு வழங்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய சூழலில், காரணத்தை விளக்குவது ஆளுநருக்கு கட்டாயமில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, விஜய் மற்றும் மூத்த நிர்வாகிகள், தற்போது 107 அல்லது 108 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள ஆதரவு விரைவில் கிடைக்கும் என்றும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் அவர்கள் ஆளுநரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டாலும், இன்று பதவியேற்பு விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நேற்று இரவிலிருந்து அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பதவியேற்பு விழாவை நடத்த தமிழக அரசின் பொதுத்துறை மீண்டும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். முக்கிய விருந்தினர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் முடிந்த பிறகே விழா நடைபெறும். எனவே, இன்று பதவியேற்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆளுநரை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். கூடுதல் விளக்கங்கள் கோரப்பட்டதன் அடிப்படையில் அவர் மீண்டும் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை. எனவே தற்போதைய சூழலில்  தவெக தலைவர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது ந ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முடிவு என தகவல். பெரும்பான்மை இருக்கிறது என விஜய் நிரூபித்தால் அடுத்த நிமிடம் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்றும் கூறப்படுகிறது.  தற்போது அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகை எவ்வாறு முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநரின் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share