சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள்!! தலைநகரில் தனிகவனம் செலுத்தும் விஜய்! பின்னணி இதோ!
தலைநகர் சென்னைக்கு கேபினட்டில் அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். 33 பேர் கொண்ட அமைச்சரவையில் சென்னையில் இருந்து 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ள Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை அமைப்பு, தற்போது மாநில அரசியலில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
குறிப்பாக, திமுகவின் பாரம்பரிய பலமாக கருதப்பட்ட தலைநகர் சென்னை நகரில் 16 தொகுதிகளில் 14 இடங்களை கைப்பற்றிய தவெக, அதனை அடுத்த கட்ட அரசியல் கோட்டையாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
33 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட மொத்தம் 7 அமைச்சர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: "மீண்டும் வந்தே மாதரம் முதலிடம் "..! தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடக்கம்..!
பெரம்பூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், தி.நகர் தொகுதியின் என். ஆனந்த், மயிலாப்பூரின் வெங்கட் ரமணன், வில்லிவாக்கத்தின் ஆதவ் அர்ஜுனா, எழும்பூரின் ராஜ்மோகன் ஆகியோர் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆர்.கே நகர் தொகுதியின் மரிய வில்சன் மற்றும் வேளச்சேரி தொகுதியின் குமார் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மட்டுமல்லாமல், ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜேசிடி பிரபாகர் சட்டப்பேரவை சபாநாயகராகவும், விருகம்பாக்கம் தொகுதியின் சபரிநாதன் அரசு தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் வெற்றி பெற்ற 14 எம்.எல்.ஏ-க்களில் 9 பேருக்கு முக்கிய அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் ஆட்சியை பிடிக்கவும், நீண்ட காலம் தக்கவைக்கவும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற வாக்கு வங்கி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதை நன்கு உணர்ந்துள்ள விஜய், நிர்வாகத்தின் மையமாக இருக்கும் சென்னையை நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற வளர்ச்சி, மெட்ரோ விரிவாக்கம், வெள்ள மேலாண்மை, போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் விரைவான மாற்றங்களை கொண்டு வந்து, சென்னையை தவெக ஆட்சியின் முகமாக மாற்றும் திட்டத்தில் அரசு செயல்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: "REAL மாமன்னன் MOMENT"..! தந்தைக்கு சீட் கொடுக்காத அதிமுக... மகனை அமைச்சராக்கிய தவெக..!