“விஜய் இன்னும் விசில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்!” மதுரையில் நயினார் நாகேந்திரன் விளாசல்!
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து மிகவும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், மதுரையில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்திற்கான இடத்தைத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஆய்வு செய்தார். மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள இந்த இடத்தில் தான் கடந்த 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடினார். அப்போது அவர் பேசியதாவது,
வருகிற 28-ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தினகரன், தமாகா ஜி.கே.வாசன், பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அணிவகுக்க உள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டமாக இது அமையும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் மூளைச்சாவு.. 7 பேருக்கு வாழ்வளித்த மாமனிதர்..! நெகிழ்ச்சி சம்பவம்..!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கேட்டபோது, "அண்ணா திமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு என்னத் தகுதி இருக்கிறது? இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. விசிலை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தால் அரசியல் நடக்காது. காங்கிரஸ் கட்சி எப்படியாவது விஜயுடன் கூட்டணி வைக்க முயன்றது, அது முடியாமல் போனதால் இப்போது மீண்டும் திமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்" என எள்ளி நகையாடினார்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், "ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் ஒரு பபூன் போலச் செயல்படுகிறார். அவரதுப் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று முதல்வர் சொல்கிறார். ஆனால், இது கஞ்சா நிறைந்த, கற்பழிப்பு நிறைந்த நாடாக மாறிவிட்டது. காவல்துறையினருக்கேப் பாதுகாப்பு இல்லாதச் சூழல் உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மதுரை வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அங்குத் தீபம் ஏற்ற முடியாமல் மக்கள் படும் வேதனையைத் தீர்க்கப் பிரதமரின் வருகை ஒரு மருந்தாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா மற்றும் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். கூட்டணிக் குழப்பங்களுக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் இணைந்து மேடை ஏறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அலங்காநல்லூரில் சீறப்போகும் காளைகள்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் தீவிரம்!