×
 

அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

தென் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற உள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை அருகே கோவளத்தில் நடைபெறுகிறது. தென் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக காவிரி நீர் பங்கீடு, கர்நாடகாவின் நீண்டகால கோரிக்கையான மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இரு மாநில முதலமைச்சர்களும் ஒரே மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதனால் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நேரடியாக கருத்துகள் பரிமாறப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று மாலை சென்னையில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விஜய் பெங்களூரு செல்ல இருந்த நிலையில், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில், தமிழகம் வரும் டி.கே. சிவக்குமார் அவரை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்துடன் மற்றொரு முக்கிய பிரச்சினையாக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பும் இந்த மாநாட்டில் பேசப்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ள தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உள்ளது.

தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகவும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, மாநாடு நடைபெறும் ஹோட்டல் வளாகம் முதல் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு அந்தப் பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணைத் திட்டம், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தென் மாநிலங்களை மட்டுமின்றி தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு கவனம் பெற்றுள்ளது. மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தக் கூட்டம் முக்கியமான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கு... 3 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share