மாறுவேடத்தில் களமிறங்கிய பாஜக... மறுக்காமல் வழிவிட்ட விஜய்... ஆளுநர் ஆய்விற்குள் மறைந்திருக்கும் திடுக்கிடும் உண்மை...!
தற்போது ஆளுநரின் நடவடிக்கைகளை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறி வந்த இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தற்போது ஆளுநரின் நடவடிக்கைகளை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அண்மையில் ஆளுநர் மதுரையில் ஆய்வு மேற்கொண்டதுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் (எஸ்பி) ஆலோசனை நடத்தினார். மேலும், வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், கூட்டணிக் கட்சிகள் இதுகுறித்து வெளிப்படையான கருத்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இதேபோன்ற விவகாரங்களில் திமுகவுடன் இணைந்து இடதுசாரி கட்சிகளும், விசிகவும் ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததாகவும், மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் தற்போது அதேபோன்ற சூழலில் அவர்கள் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பாகவும் கூட்டணிக் கட்சிகள் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இருப்பினும், அண்மையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பெண் எம்எல்ஏ தாரகை கத்பட் உள்ளிட்டோர், கன்னியாகுமரியில் நடைபெறும் கனிம வளச் சுரண்டலுக்கு எதிராக மனு அளித்ததாகவும், அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் விஜயை சந்தித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைத் தொடர்ந்து பெரிய அளவிலான போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்லாமியர் தொடர்பான பல்வேறு விவகாரங்களிலும் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, 'திருப்பரங்குன்றம் Files' ஆவணப்படம் மத ஒற்றுமையை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டாலும், அதை வெளியிட அரசு தயக்கம் காட்டியதாகவும், சில பொதுஇடங்களில் திரையிட முயற்சிக்கப்பட்டபோது காவல்துறையினர் குவிக்கப்பட்டு திரையிடுவது தடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அதேபோல், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசு உரிய முறையில் வாதிடவில்லை என்பதால் நீதிமன்றம் எதிர்மறையான தீர்ப்பை வழங்கியதாகவும், அது எதிர்காலத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், பக்ரீத் பண்டிகையையொட்டி மாடு, ஆடு வெட்டுவது தொடர்பான வழக்குகளிலும் அரசு நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை என்றும், இவை அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறப்படும் முதலமைச்சர் விஜய், அமைச்சரவையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியிருந்தாலும், நடைமுறையில் இஸ்லாமியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.
இதையும் படிங்க: 2 முறை தேசிய கீதம்... சட்டசபையில் சரித்திர நிகழ்வு..! ஆளுநர் அர்லேகர் பெருமிதம்..!!