×
 

"வசனம் வேறு... ஆட்சி வேறு!" - த.வெ.க அரசை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

கடந்த 3 மாதங்களில் ரூ.20,281 கோடி கடன் வாங்கியுள்ள தவெக அரசு, இந்த ஆண்டில் ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கவர்ச்சிகரமான விளம்பர அரசியலை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு மக்களின் நம்பிக்கையைத் தவெக பெற முடியாது என்றும், கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள தவெக அரசு, நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் சூழலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் உயிரற்றுப் போகுமா என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவீன அரசியல் களத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கவர்ச்சிகரமான புனைகதைகள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆர்.பி. உதயகுமார், சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் போது மக்களின் பேரெழுச்சி அவநம்பிக்கையாக மாறிவிடும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு கட்சியின் உண்மைச் சித்தாந்தம் நெருக்கடியான காலங்களில் எடுக்கும் முடிவுகளில்தான் வெளிப்படும். தற்காலிக அரசியல் லாபத்திற்காகக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கும் போது, அந்த லாபமே நிலையான சித்தாந்தமாக மாறிவிடும். அப்படித்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையையும் நாம் பார்க்கிறோம்" என விமர்சித்தார்.

தொடர்ந்து தவெக தலைவரின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "காவிரிப் பிரச்சனை, மேகதாது விவகாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், மின்வெட்டு, அரசு மருத்துவமனைகளின் அவலநிலை, கோயில்கள் நிலம் ஆக்கிரமிப்பு, நீட் தேர்வு விலக்கு மற்றும் லாக்கப் டெத் போன்ற மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்சனைகளில் விஜய் வகிக்கும் மௌனம், அவரது கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு இயல்பாகவே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொய் மற்றும் கவர்ச்சி ஒரு தேர்தலில் வெற்றி தரலாம்; ஆனால் அரசியல் அறம் மட்டுமே காலத்தைக் கடந்து ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்" எனச் சாடினார்.

இதையும் படிங்க: மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

மாநிலத்தின் கடன் நிலை குறித்துக் கடுமையான புள்ளிவிவரங்களை முன்வைத்த ஆர்.பி. உதயகுமார், "கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டும் தவெக அரசு ₹20,281 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் இன்னும் ₹1.22 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பத்திரப்பதிவு மூலம் வரி வருவாய் வந்த போதிலும், ஏற்கனவே ₹10 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை இந்த அரசு எங்கே கொண்டு செல்கிறது? தினசரி நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் இந்த அரசு, நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா அல்லது உயிரற்றுப் போகுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என ஆவேசமாகத் தெரிவித்தார். ஆர்.பி. உதயகுமாரின் இந்த அனல் பறக்கும் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

இதையும் படிங்க: நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share