விளையாட்டின் நேர்மைக்கு எதிரானது! இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்து அறிக்கை!
வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அதிரடி முடிவுக்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகளாவிய விளையாட்டுத் தொடர்களில் ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது விளையாட்டின் அடிப்படை நேர்மை, சமத்துவம் மற்றும் போட்டித்தன்மைக்கு எதிரானது. இது உலகக் கோப்பைத் தொடரின் புனிதத்தை நிலைகுலைக்கும் செயலாகும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இதன் விளைவுகளைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்! 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!
உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது அனைத்து உறுப்பு நாடுகளின் கடமையாகும். இந்த சிக்கலுக்கு ஒரு சுமுகமானத் தீர்வை எட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒத்துழைக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது லீக் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் விளையாட உள்ளது. இருப்பினும், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டியை மட்டும் பாகிஸ்தான் அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி களம் இறங்காது என பாகிஸ்தான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி ரீதியாகவும், புள்ளிகள் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியாவுடனானப் போட்டியில் பங்கேற்காவிட்டால், இந்தியாவுக்கு 2 புள்ளிகள் தானாகவே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்முக தன்மை காப்போம்; பாரதம் போற்றுவோம்! - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து