சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் இன்று நடைபெற்ற நிகழ்வில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்திருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், அவர்களில் 15 பேரைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார்.
அதன்படி என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜ்னீஷ் பத்தியில் ஆகிய 8 வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வந்த பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், புதிய நீதிபதிகளுக்குத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன், இந்தியாவிலேயே அதிக அளவாக 13 பெண் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றமாகச் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும், புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரே நேரத்தில் 15 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கான அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளதை அடுத்து, நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆகக் குறைந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை, கோவை உட்பட 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!