விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் வழக்கு.. சிக்கிய கூட்டாளிகள்.. தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை..!
நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!
அவரை தொடர்ந்து கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனையடுத்து நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அரும்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் சப்ளை செய்ததாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…