×
 

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் பரபரப்பு..!! முழுவீச்சில் தவெக, திமுக..!! பரிதாப நிலையில் அதிமுக..!!

இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் தன் செல்வாக்கை மீட்டெடுப்பது கடினம் என்பதை தி.மு.க. உணர்ந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகும் தமிழக அரசியல் களம் அமைதியற்ற நிலையிலேயே உள்ளது. எதிர்பாராத தோல்வியால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க.வில் தொடர் உட்கட்சி மோதல்கள் பூதாகரமாக வெடித்துள்ளன. கட்சி ஒன்றிணைந்தாலும் உள்ளகப் பூசல்கள் அடங்காமல் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த நகர்வு அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. பக்கம் சாயக்கூடும் என்கிற அச்சம் கட்சியில் நிலவுகிறது. இதனால் தி.மு.க. தன் கூட்டணி கட்சிகளை இழக்கும் அபாயத்தையும், அதிமுக தனது அடிப்படை வலிமையையே இழக்கும் நிலையையும் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது:

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதி, முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற இடமாகும். அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டதால் இந்த இடைத்தேர்தல் அவசியமானது. தற்போது 107 எம்.எல்.ஏ.க்களுடன் செயல்பட்டு வரும் த.வெ.க., இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் தனது பலத்தை 112 ஆக உயர்த்திக் கொள்ளும். 

விடுதலைச் சிறுத்தைகள் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவுடன் ஐந்தாண்டு ஆட்சியை உறுதிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் த.வெ.க. தீவிரமாகத் தயாராகி வருகிறது. மறுபுறம், தி.மு.க. இந்த இடைத்தேர்தலை தனது அரசியல் எதிர்காலத்துக்கு முக்கியமானதாகக் கருதி, ஐந்து தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி, பலம் வாய்ந்த பெயர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் தன் செல்வாக்கை மீட்டெடுப்பது கடினம் என்பதை தி.மு.க. உணர்ந்துள்ளது. அதிமுகவோ தொடர் தோல்விகள் மற்றும் உட்கட்சி குழப்பங்களால் பெரும் நெருக்கடியில் உள்ளது. மீண்டும் தோல்வி ஏற்பட்டால் கட்சியில் புதிய பிளவு ஏற்படும் என அஞ்சி, தேர்தலைப் புறக்கணிக்கலாமா என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் பா.ஜ.க.வும் தங்கள் உத்திகளை வகுக்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகின்றன.

விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இடைத்தேர்தல் அனைத்து கட்சிகளின் எதிர்கால அரசியல் வலிமையையும் நிர்ணயிக்கும் முக்கிய தேர்வாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: இபிஎஸ் மீது அதிருப்தி - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share