அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்... வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளராக V.S. பாபு நியமனம்
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை மாற்றி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை கடுமையாக கண்டித்து பூத் கமிட்டி என்பது தேர்தலில் மிக முக்கியமான பங்கு வகிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றி அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
அதில், வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் T.G.வெங்கடேஷ்பாபு EX.MP., தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புரசை V.S. பாபு, Ex. M.L.A., வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!
மேலும், T.G.வெங்கடேஷ்பாபு EX.MP., அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் D. ஜாண்தங்கம், அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருவட்டார் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் R. ஜெயசுதர்ஷன் கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் D. ஜாண்தங்கம் இன்று முதல் நியமிக்கப்படுவதாகவும் கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் வேண்டுமென்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே சாக்கடை தண்ணி.. கொசு தொல்லை.. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!