வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடுருவ தி.மு.கவினர் திட்டம்? - இன்பதுரை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடுருவ தி.மு.கவினர் திட்டம்? - இன்பதுரை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடனும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் தனித்தும் போட்டியிட்டன. இதனால் தமிழக அரசியல் களத்தில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும் 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அடையாளச் சான்றுகளை சரிபார்க்கவும், முறையான உடல் பரிசோதனை செய்யவும் நுழைவு வாயில்களில் போதுமான காவல் துறையினர் நிறுத்தப்படுவார்கள். இரண்டாம் கட்டமாக வாக்கு எண்ணும் வளாகத்தின் நுழைவு வாயில்கள் மாநில ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதோடு, அனுமதியற்ற நடமாட்டம் அல்லது நடமாடுவதைத் தடுப்பார்கள்.
மூன்றாம் அடுக்கில், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) பாதுகாப்பு அறைகளின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான பாதுகாப்பு அடுக்கு, மத்திய ஆயுதப் காவல் படையினரால் (CAPF) நிர்வகிக்கப்படும். கைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: சொந்த தொகுதியில் முத்திரை பதிக்கும் அதிமுக பொதுச்செயலாளர்! எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!
இத்தகைய நிலையில், திமுகவினர் வாக்கு எண்ணும் மையங்களில் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கூறி அதிமுக தரப்பில் பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் திமுகவினர் சட்டவிரோதமாக உள்ளே நுழையத் திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க வழக்கறிஞர் இன்பதுரை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மற்றும் அவர்களின் ஐடி விங் (IT Wing) பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழையத் திட்டமிட்டுள்ளதாக இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் செல்பவர்களுக்காகக் கியூஆர் கோடு (QR code) மற்றும் ஸ்கேனிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த பாதுகாப்பு அம்சம் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளுக்குப் பொருந்தாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி வைக்கும் நிலை வராது... எதிர்பாராத இடத்தில் இருந்து தவெகவிற்கு வந்த பதிலடி...!