நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!
பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும், இன்னும் ஆட்சியமைக்க முடியாமல் போராடி வருகிறது. விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தவெக ஆதரவு கோரியது தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறது. இதனிடையே திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க இருப்பதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட இருக்கின்றனர்.
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கலாம் என்ற தகவல் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினால், தவெகவின் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தமிழக அரசியலில் நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தனித்தனியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரி இருந்தார். விஜய்யின் கோரிக்கை தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி இருக்கிறது. இதனால் சிபிஎம் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தவெகவினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அனைவர் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!
மற்றொருபுறம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி வில்சன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் அவசர அவசரமாக வீட்டில் இருந்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். பனையூரில் தவெக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடந்து வருகிறது. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்டோர் அங்கிருக்கும் நிலையில், விஜய் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தநிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்தால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என சென்னை பாஜக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் ஒரே எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்றுள்ளார். இதனால் அடுத்து என்ன மாதிரியான முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசியல் களத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!