இதுக்கு ஒரு என்டே இல்லையா?... வேட்டியை மடித்துக் கட்டி களமிறங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பரபரப்பான கரூர்...!
இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்மங்கலம் தாலுகா, வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரூர் வடபாகம் பஞ்சாயத்து முனியப்பனூர் பகுதியில், காவிரி ஆற்றில் பகல்–இரவு என்ற வேறுபாடின்றி தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை சிறைபிடித்துள்ளார்.
அரசு அனுமதியுடன் நடைபெறும் மணல் எடுப்பை விடவும், தற்போது நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக மோசமான அளவில் நடைபெற்று வருகிறது. 220 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய இயந்திரங்கள் (பொக்லைன்) மற்றும் லாரிகள் மூலம், அரசு அனுமதி பெற்ற குவாரி போல மணல் எடுத்து, வேறு இடங்களில் கொட்டி அங்கிருந்து லோடுகள் ஏற்றிச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஒரு இடம் மட்டுமின்றி, அருகில் உள்ள மேலும் மூன்று இடங்கள் உட்பட மொத்தம் நான்கு இடங்களில் தினந்தோறும் கோடி கோடியான மதிப்பில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு குறைந்தது 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள மணல் வெளியில் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, சுமார் 3 முதல் 4 கிலோமீட்டர் நீளமான காவிரி ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காவல்துறை, வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பதற்றம்... அப்பல்லோ மருத்துவமனை விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்....!
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் துணை இல்லாமல் இவ்வளவு பெரிய அளவில் மணல் கொள்ளை நடைபெற வாய்ப்பே இல்லை. வருவாய்துறை, காவல்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இது தெரிந்தே நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் தனி சட்டம், தனி அரசாங்கம் நடப்பது போல் நிலைமை உள்ளது. யாரும் எதையும் கேட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, தினமும் செல்லும் லாரிகளுக்கான கமிஷன் தொகையை வசூலிப்பதே சில அதிகாரிகளின் பணியாக மாறியுள்ளது. புகார் அளிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டால், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உயர் அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தில் இருப்பதாக பதில் தரப்படுகிறது எனக்கூறினார்.
இந்தப் பகுதியில் முக்கியமான குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. காவிரி ஆற்றில் இருந்து கரூர் நகராட்சி, அருகிலுள்ள 12 பஞ்சாயத்துகள், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. குடிநீர் கிணறுகள் உள்ள இடங்களுக்கு அருகிலேயே மணல் அகழ்வு நடைபெறுவதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி செல்லும் நிலை காணப்படுகிறது. இரவு நேரங்களில் அடியாள்களை வைத்துக் கொண்டு, அப்பகுதி மக்களை மிரட்டியும் மணல் கொள்ளை நடத்தப்படுகிறது. நாங்கள் சென்றபோது, ஐந்து பெரிய லாரிகள் பிடிபட்டன. மேலும் மூன்று லாரிகள் தப்பிச் சென்றுவிட்டன” என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் தேவைக்காக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தேர்தல் காலங்களில் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டாலும், இதுவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தற்போது அவர்களை முன்னிலைப்படுத்தி, பெரிய அளவிலான மணல் கடத்தல் நடைபெற்று வருவது அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!