நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்தும் நோக்கில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தற்போது தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், திமுக ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அதிமுக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்ட நிலையில், தங்கள் மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு வலிமை, மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவுகள், வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், அடித்தள அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய விஷயங்கள் இங்கு விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை தேர்தல் வெற்றியாக மாற்றும் வகையில் தீவிரமாக திட்டமிட்டு வரும் நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வரும் நாட்களில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நபர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நேர்காணல் நடத்தி வந்தார். அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் என்ன உத்தமரா? கருப்பு பணத்தை பதுக்கி வெச்சவரு தானே? திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்..!