#BREAKING அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பின்னணி என்ன?
அதிமுக முன்னா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா ராஜினாமா செய்ய அளித்த கடிதம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்
அதிமுக அதிருப்தி அணியில் இருந்து பின்னர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இணைந்த நிலையில், தற்போது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. அதுமட்டுமல்லாமல், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் சேர்ந்து 24 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அணியாக செயல்பட்டு வந்தனர். எடப்பாடி கே. பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: இன்று முதல் 2 நாட்களுக்கு அதிரடி... களத்தில் இறங்கிய சி.எம்.விஜய்... தலைமைச் செயலகத்தில் குவியும் முக்கிய அதிகாரிகள்...!
இந்த அணியில் முக்கிய உறுப்பினராக எம்.ஆர். விஜயபாஸ்கரும் இருந்தார். எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், அவரிடம் இருந்த கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டது.
இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சில நாட்களுக்கு முன்பு அதிருப்தி அணியினருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், முன்பு வகித்த மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை.
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக, அதிமுகவின் கொள்கைப் பரப்புச் இணைச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவிக்கு மாவட்ட நிர்வாக அதிகாரங்கள் எதுவும் இல்லை. கட்சி நிர்வாகிகளை நியமித்தல், கூட்டங்களை நடத்துதல், ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தல், பகுதி மற்றும் கிளைச் செயலாளர்களை நியமித்தல் அல்லது நீக்குதல் போன்ற அதிகாரங்கள் மாவட்டச் செயலாளருக்கே உரியவை.
தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்களில் பங்கேற்பது மற்றும் கட்சிக் கூட்டங்களில் பேசுவது போன்ற பணிகளை மட்டுமே கொள்கைப் பரப்புச் இணைச் செயலாளர் மேற்கொள்ள முடியும். எனவே, மாவட்டச் செயலாளர் பதவியே தனக்கு முக்கியமானது என்ற எண்ணம் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களிடமும் இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக இருந்த காலத்திலேயே மாவட்டச் செயலாளர் பொறுப்பை தக்க வைத்திருந்தனர். அந்த அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதிருப்தி அணியும், எடப்பாடி கே. பழனிசாமி அணியும் மீண்டும் இணைந்திருந்தாலும், மனப்பூர்வமான ஒற்றுமை இன்னும் உருவாகவில்லை என்ற கருத்து கட்சிக்குள் நிலவுவதாக கூறப்படுகிறது. அதிருப்தி அணியினருக்கு அவர்கள் முன்பு வகித்த பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாததால், அவர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட பின்னரும், அவர்கள் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்காததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
இன்று காலை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், சட்டமன்ற பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்ற பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
அதிருப்தியில் இருந்து விலகிய பின்னரும் தனக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல், டம்பி பதவி கொடுத்ததால் அதிருப்தியில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இனியும் அதிமுகவில் தொடர்ந்தால் தனக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என முடிவெடுத்ததாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனக்கு எடப்பாடி பழனிசாமி சீட் கொடுப்பாரா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி என்பதாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், கட்சிப் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இருப்பினும், இதுகுறித்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பை தொடர்புகொண்டபோது எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் கிடைக்கவில்லை. அவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவருக்கு நெருக்கமான சிலர் இதுபோன்ற தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!