×
 

ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

தவெக MLA ஜல்லிக்கட்டு குறித்து பேசியதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசிய கருத்துகளைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு பெரும் தொகை செலவிடப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். அந்தப் பணத்தை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு மையமாக இருப்பதால், அந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசியது பல தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்தப் பேச்சைக் கண்டித்து உடனடியாக கட்சி அறிக்கை வெளியிட்டார். தமிழர்களின் பண்பாடு, வீரம் மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தும் வகையில் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் நினைவுபடுத்தினார்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியது.இதையடுத்து, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் பெருமளவில் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்றும், அதைக் கொச்சைப்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்கப்படாது என்றும் வலியுறுத்திப் பேசினர். தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர் மற்றும் கண்டன முழக்கங்களை முன்வைத்தனர்.

 

இதையும் படிங்க: ட்ரம்ப்-க்கே டஃப்..! அமெரிக்கா அதிபர் விஜய்..!! பிரதமர் விவகாரத்தில் கிண்டலடித்த EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share