×
 

மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!

ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் 3-வது பெரிய இயக்கமாக அதிமுகவை மாற்றிக் காட்டினார் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீண்டும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வில் தன்னுயிரைத் தியாகம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த பூக்கடை மகேந்திரன் என்பவருக்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் உணர்ச்சி பூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடத்தினார்.

நிகழ்ச்சியில் அதிமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் என எராளமானோர் கலந்துகொண்டனர். அனைவரும் கையில் மெழுகுவத்திகளை ஏந்தியபடி, இறந்த தொண்டரின் புகைப்படத்திற்கு மலர்வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர். சோகம் நிறைந்த சூழலில் தொண்டர்கள் கண்களில் நீர் திரையிட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுகவின் ஒற்றுமை மற்றும் எதிர்காலத்துக்காக மகேந்திரன் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். அவருக்கு கட்சி சார்பில் வீர அஞ்சலி செலுத்துகிறோம். இந்த வீரமரணம் அதிமுக தொண்டர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறது” என்றார்.

இதையும் படிங்க: "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

தொடர்ந்து அவர் கூறியதாவது: “தற்போது அதிமுக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தப் பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் தங்களை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றும் வகையில் தொண்டர்கள் வீறு கொண்டு எழ வேண்டும். மகேந்திரனின் உயிரிழப்பை படிப்பினையாகக் கொண்டு, கட்சியின் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தங்களை விமர்சித்தவர்கள், ஏசியவர்களைக் கூட தாயுள்ளத்தோடு கட்சியில் இணைத்து அரவணைத்தனர். அதே மனப்பான்மையை ஒவ்வொரு தலைவரும் கடைபிடிக்க வேண்டும். மகேந்திரனின் மரணம் இறுதி மரணமாக இருக்க வேண்டும். அதிமுக மீண்டும் எழுச்சி பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் “ஜெயலலிதா தலைமையில் அதிமுக இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக உருவெடுத்தது. தொண்டர்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கட்சியை வலுப்படுத்த தலைமை பொறுப்பேற்க வேண்டும்” என்றும் செல்லூர் ராஜு கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்வு அதிமுகவினரிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் தியாக உணர்வு கட்சியின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையும் வலுத்து வருகிறது.
 

இதையும் படிங்க: கத்தி பட டயலாக் பேசினா பொய் உண்மையா ஆகாது - முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share