×
 

"டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் நடக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார்.

"அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை; டெல்லியிலும் நடத்தலாம். எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவைச் சந்தித்தது வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்னும் ஓரிரு தினங்களில் (நாளை அல்லது மறுநாள்) சென்னை வரவுள்ளார். அவர் வந்தவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேசப்பட்டு இடங்கள் இறுதி செய்யப்படும். கூட்டணிக்குள் எந்தச் சிக்கலும் இல்லை என்றும், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு விருப்பமான அல்லது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்பதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதா இல்லையா என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். இது குறித்துத் தவெக நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமான அமைப்புகள். தவெக தலைவரிடம் அவர்கள் என்ன விசாரணை நடத்தினார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனப் பதிலளித்தார்.

விளாத்திகுளம் மாணவிக்கு நடந்தது மிகக் கொடூரமானது. அந்த மாணவியின் உடலில் 22 இடங்களில் தழும்புகள் உள்ளன. இதற்குப் போதைப் பொருட்களின் நடமாட்டமே முக்கியக் காரணம் எனச் சாடினார். கைது செய்யப்பட்டுள்ள நபர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர். அவர் மட்டும் இதில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பதை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 34 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அனைத்தையும் திமுக அரசு உயர்த்தியுள்ளதாக அவர் விமர்சித்தார். "தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் மக்களுக்குப் பணம் கொடுப்பது வெறும் வாக்கு வங்கி அரசியலே தவிர வேறில்லை" என்றார்.

இதையும் படிங்க: நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share