துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள உயர்கல்விப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களுக்குத் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி மற்றும் செங்கல்பட்டைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழகத்தில் உள்ள மொத்தம் 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் இல்லாமல் நீண்டகாலமாகக் காலியாகவே உள்ளன. இதனால் கல்வி சார்ந்த முக்கிய கொள்கை முடிவுகளையும், நிர்வாக முடிவுகளையும் எடுக்க முடியாமல் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புழல் சிறையில் கைதிகளை சந்திக்க கூடுதல் நேரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் உறுதி!
இதற்குப் பதிலளித்து வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உத்தரவாதம் காரணமாகவே பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனச் செயல்முறைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்தச் சட்டம் இன்னமும் அமலில் உள்ளதாகவே கருதப்பட வேண்டும். அச்சட்டத்தின் அடிப்படையில் தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராகத் தேர்வு செய்து நியமிக்க அரசுக்கு அனுமதி அளித்தால் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு, பல்கலைக்கழகங்களின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராஜினாமாவை ஏற்றதில் உள்நோக்கம் இல்லை: அதிமுக வழக்கில் சட்டமன்றச் செயலாளர் விளக்கம்!