இதுதான் நம்பர்.. நோட் பண்ணிக்கோங்க..!! 'HI' அனுப்பினால் போதும்.. தேடி வரும் ஆம்புலன்ஸ்.. புதிய வசதி..!!
வாட்ஸ்அப் மூலம் எளிதாக ஆம்புலன்ஸை அழைக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொது மக்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அவசர மருத்துவ உதவிக்காக இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை இனி மேலும் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது வாட்ஸ்அப் மூலமாகவும் ஆம்புலன்ஸை அழைக்க முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளை தரமுயர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளால், அரசு மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவை ஏற்படும் போது, மக்கள் உடனடியாக 108 என்ற எண்ணை அழைத்து ஆம்புலன்ஸ் உதவி பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய சட்டத்தை மதிக்காவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறு! மெட்டாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
இந்தியா முழுவதும் பிரபலமான இந்த 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆம்புலன்ஸ் அழைப்புக்கு பதிலளித்து சம்பந்தப்பட்ட இடத்தை அடைவதற்கான சராசரி நேரம்:
- பெருநகரப் பகுதிகளில்: 6 நிமிடங்கள் 59 வினாடிகள்
- நகர்ப்புறங்களில்: 9 நிமிடங்கள் 40 வினாடிகள்
- கிராமப்புறங்களில்: 11 நிமிடங்கள் 31 வினாடிகள்
- மலைப்பகுதிகளில்: 13 நிமிடங்கள் 18 வினாடிகள்
சாலை விபத்துகள் போன்ற அவசர சமயங்களில் 9 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சென்றடையும் வகையில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த சேவையை இன்னும் விரைவுபடுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' (ஹாய்) என்று ஒரு செய்தி அனுப்பினால் போதும். உடனடியாக 'Book Ambulance' என்ற லிங்க் வரும். அதைத் தேர்ந்தெடுத்து, தங்கள் துல்லியமான இருப்பிடத்தை (லொகேஷன்) பகிரலாம்.
இதன்பின் 108 அழைப்பு மையத்திலிருந்து உறுதிப்படுத்துவதற்காக தொலைபேசி அழைப்பு வரும். இதன் மூலம் இடத்தை துல்லியமாக அறிந்து ஆம்புலன்ஸ் விரைவாக அனுப்ப முடியும். இந்த புதிய வசதி, குறிப்பாக தொலைபேசி அழைப்பு செய்ய முடியாத சூழல்களில் அல்லது இருப்பிடத்தை வார்த்தைகளால் விளக்குவதில் சிரமம் ஏற்படும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவசர காலங்களில் உயிர்காக்கும் இந்த சேவையை அனைவரும் தங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.இத்தகைய முன்னேற்றங்கள் மூலம் தமிழ்நாடு அரசு, கிராமம் முதல் நகரம் வரை அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ உதவியை உறுதி செய்யும் முயற்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.3000... தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?... கசிந்தது முக்கிய தகவல்...!