9ம் ஆண்டில் அமமுக: திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பிடுவோம்..!! சபதம் எடுத்த டிடிவி தினகரன்..!!
வரும் தேர்தலின் மூலம் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) தனது ஒன்பதாம் ஆண்டு பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உருக்கமான மடல் எழுதியுள்ளார். அமைதி, ஆக்கம், நல்வளர்ச்சி, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, தமிழக மக்களின் முன்னேற்றத்தையே தனது உயிர்மூச்சாகக் கருதிய புரட்சித் தலைவி அம்மாவின் பெயரையும், அவரது மலர்ந்த புன்னகை ததும்பும் திருவுருவத்தையும் கொடியில் தாங்கியுள்ள அமமுக, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி மதுரை மேலூரில் லட்சக்கணக்கான தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், தற்போது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து, ஒப்பற்ற ஒன்பதாம் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது.தொண்டர்களின் அளவிட முடியாத உழைப்பும், அர்ப்பணிப்பும் இயக்கத்தை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்கின்றன.
கழகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்திய மேலூர் சாமி, செயல்வீரர் வெற்றிவேல் போன்றோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்த தினகரன், அவர்கள் இப்போது இல்லையென்றாலும், அவர்களின் பணிகள் வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் காலம் நெருங்கிவிட்டதாக உறுதியளித்துள்ளார்.இயற்கை பேரிடர்களான மழை, வெள்ளம், புயல் என எதுவாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை சிக்கல்களாக இருந்தாலும் சரி, மக்களுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கும் நிலைப்பாட்டை அமமுக தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
இதையும் படிங்க: "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!
இதனால் தனித்துவமிக்க அடையாளத்துடன் மக்கள் மத்தியில் மாபெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.அம்மாவின் சொந்தத் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கிய வெற்றிப்பயணம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கணிசமான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆதரவை நிரூபித்தது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, கழக நிர்வாகிகள் முக்கிய பொறுப்புகளை அலங்கரித்தனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தொண்டர்கள் அயராது உழைத்தனர் என்று தினகரன் பாராட்டியுள்ளார். திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு நிர்வாகத்தில் அடிமட்டம் முதல் மூத்த அமைச்சர்கள் வரை ஊழல், முறைகேடு புகார்கள் மலைபோல் குவிந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி மற்றும் கட்டண உயர்வுகள், ஐந்து லட்சம் கோடி கடன் குவித்தல் ஆகியவை தமிழகத்தை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றியுள்ளன. மாநில உரிமைகளை தேர்தல் கூட்டணிக்காக விட்டுக்கொடுத்ததால் அண்டை மாநிலங்கள் தமிழகத்தை பலவீனப்படுத்தி வருவதாகவும், 2021 தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
திமுகவின் “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் புதிய வாக்குறுதிகள் வழங்குவதை பொய்யான முயற்சியாக கண்டித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 மற்றும் சிறப்புத் தொகை ரூ.2,000 வழங்குவதால் பாலியல் வன்முறை சம்பவங்களை மறந்து மகளிர் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தை கடுமையாக எதிர்த்துள்ளார். வரும் தேர்தலில் மகளிர் ஒட்டுமொத்தமாக தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி ஒரு நாள் சாதனை அல்ல, தொடர் பயணம் என்பதை வலியுறுத்திய தினகரன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒற்றுமையாக களப்பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தமிழக மக்களை ஏமாற்றி, வஞ்சித்து, துரோகம் இழைத்து வரும் திமுகவை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நிரந்தரமாக ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்று உறுதியேற்றுள்ளார். “நமது லட்சியம் உயர்வானது! பார்வை தெளிவானது!! வெற்றி முடிவானது!!!” என்று அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!