சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!
சோழவந்தான் எம் எல் ஏ ஜல்லிக்கட்டு குறித்து பேசியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் ஜல்லிக்கட்டு குறித்த பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரியத்தோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று சட்டமன்றத்தில் பேசியது கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் வரிப்பணத்திலிருந்து கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே அவையில் அதை முன்மொழிந்தது போலவே, உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதாக தினகரன் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற பாரம்பரிய உரிமையைக் கொச்சைப்படுத்தும் வகையில் தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என அவர் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!
தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார். வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, அந்த உறுப்பினர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!