×
 

அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவு சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் போலியான ஆதார் அட்டைகளை பயன்படுத்தியிருந்தது தெரியவந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அருகே செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஏழு பேர் ஒடிசா மாநிலத்தையும், இரண்டு பேர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் முக்கிய முரண்பாடுகளை கண்டறிந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவராக பதிவு செய்யப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா பெண் உண்மையில் உயிருடன் ஆந்திரப் பிரதேசத்தில் வேலை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், திருவள்ளூர் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: 7 உயிர்களை காவு வாங்கிய அமோனியா வாயு..! FIR- ல் திடுக்கிடும் தகவல்கள்...!

இந்த தகவல் வெளியாகியதையடுத்து தொழிற்சாலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியமர்த்தப்படும் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தொழிலாளர்களின் அடையாள ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டதா, போலி ஆவணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, இதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு தரப்பில், ஆதார் அட்டை மோசடி தொடர்பான விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த பிறகு, தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாயு கசிவு விபத்து மட்டுமல்லாமல், தொழிலாளர் அடையாள மோசடியும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. விசாரணையின் அடுத்த கட்டத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து தலையில் இறங்கும் பேரடி..! வாயுக் கசிவால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share