வங்கி ஊழியர்களா.. கந்துவட்டி காரர்களா..! யார் கொடுத்த அதிகாரம்? சீறிய அன்புமணி..!
கடன் தவணை செலுத்ததற்காக திட்டியதால் மன உளைச்சலில் உழவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வங்கியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையை திரும்பச் செலுத்த 20 நாட்கள் தாமதமானதால் ஊழியர்கள் கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி வடிவேல் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், விவசாயி வடிவேல் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை. அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடன் தவணையை செலுத்தத் தவறும் அல்லது தாமதிக்கும் உழவர்களை திட்டுவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும், எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை., கடன் தவணையை செலுத்த ஒருவர் தவறினால், அவருக்கு முறைப்படி அறிவிக்கை அனுப்பி அவரிடம் விளக்கம் பெற வேண்டும்; அவர் கடனை செலுத்த போதிய காலக்கெடு வழங்க வேண்டும்; அதன்பிறகும் அவர் கடனை செலுத்தவில்லை என்றால் மட்டும் தான் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன்.. தமிழகத்தில் பிரிக்க முடியாதது வாரிசு அரசியலும் இளைஞரணி பதவியும்!
ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தான் உழவர்களின் தற்கொலைக்கு காரணம் என்றும், வடிவேலின் தற்கொலை தான் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும், சிறு, குறு உழவர்களுக்கு தாரளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மது, போதை ஒழிக்கப்பட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!