டெண்டர் ஊழல்.. முறைகேட்டின் மறுபெயர் திராவிட மாடல் அரசு.. அன்புமணி அட்டாக்!
சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதாக அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் பேட்டரி ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
இத்தகைய அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும் சென்னை மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் வாகன நிறுத்துமிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!
இது குறித்து சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவரால் பதில் கூற முடியவில்லை என்றும் ஏற்கனவே கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது.,அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படாதது ஏன்., அதைக் கட்டியவர் யார்.,என்பன உள்ளிட்ட எந்த வினாவுக்கும் அவர் பதில் கூறாமல் நழுவி சென்றதாக கூறினார்.
தமிழ்நாட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் முறைப்படி கோரப்படுவதற்கு முன்பே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய அன்புமணி, மொத்தத்தில் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசு என்று சாடினார். இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இவங்களுக்கு கொடுக்க மனசே வராது.. ஏமாற்ற மட்டுமே தெரியும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!