அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள்.. அவரது பெருமையை போற்றுவோம்.. தவெக தலைவர் விஜய்..!
தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றிய அஞ்சலை அம்மாளின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாட்டுக்கு சுதந்திர சுவாசத்தை மீட்டெடுத்தவர்களில் பெண்களின் பங்கு கணிசமானது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளம். அவர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர்தான் கடலூர் அஞ்சலையம்மாள்.
கடலூர் முதுநகரில் ஓர் எளிய குடும்பத்தில் ஆயிரத்து 1890 ஆம் ஆண்டில் பிறந்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அவரது கணவர் முருகப்பா பத்திரிகையில் முகவராக பணியாற்றியுள்ளார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
இதையும் படிங்க: மே 30ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. 2 கட்டங்களாக கல்வி விருது விழா..!
இந்திய சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் பங்கேற்று வந்த அஞ்சலையம்மாள் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காக வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட, சிறையிலேயே வளர்ந்த அவரது மகனுக்கு ஜெயவீரன் என பெயரிடப்பட்டது.
மேலும் அஞ்சலையின் துணிவை காரணமாக காட்டி, காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைத்தார். 1947 இந்திய விடுதலை அடைந்த பின்னர் அஞ்சலை அம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டிற்காக பாடுபட்ட தனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தவர் அஞ்சலை அம்மாள். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கடலூர் சிதம்பரம் சாலையில் தீர்த்தம்பாளையம் என்னும் இடத்தில் நிலம் வழங்கப்பட்டு, அதற்கு பாசனத்திற்கு தனி வாய்க்காலை அரசு உருவாக்கி அதற்கு அஞ்சலை அம்மாள் வாய்க்கால் என பெயரிட்டது. இன்னுமும் அதே பெயரில் தான் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்தவரும், மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட துணிச்சலுக்கு சொந்தக்காரருமான கடலூர் அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படப்படுகிறது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;
இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயை விமர்சிக்க மாட்டேன்! திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!!