×
 

திருப்பூரில் தடையை மீறி அண்ணாமலை போராட்டம்! 600 பேர் மீது போலீசார் வழக்குபதிவு!

அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை இடுவாய் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இதற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பொதுமக்களும் 4 போலீசாரும் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் 10 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசாரின் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கைதுகளைக் கண்டித்து நேற்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்!! திருப்பரங்குன்றம் விவகாரம்! பாஜக கடும் விமர்சனம்!

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும், அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடை உத்தரவை மீறுதல், அனுமதியின்றி ஒன்றுகூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கு அமைப்பது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பாஜக தரப்பில் இது திமுக அரசின் அடக்குமுறை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கு திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்களும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இது மோடி பொங்கல்! தமிழ்நாடு விசிட் கன்ஃபார்ம்! அடுத்தடுத்து அமித் ஷா போட்டு வைத்த மாஸ்டர் ப்ளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share