10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!
போதுமான டாக்ஸிவே மற்றும் ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாததால், பெரிய ரக விமானங்களை கையாளுவதிலும் சென்னைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில், சென்னையின் 2வது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தமிழக அரசு விரைவாக தேர்வு செய்ய வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
புதிய விமான நிலையம் தொடர்பான முடிவில் மேலும் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அதற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!
ஒரு இடத்தை தேர்வு செய்த பிறகும் மத்திய அரசின் அனுமதி, சட்டப்பூர்வ ஒப்புதல்கள், டெண்டர், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பல்வேறு உரிமங்கள் உள்ளிட்ட பணிகளை முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என்றும், இந்த காலதாமதத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் விமான போக்குவரத்து கட்டமைப்பில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தமிழகம் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், டெல்லி 5,100 ஏக்கர், பெங்களூரு 4,000 ஏக்கர், நவி மும்பை 2,866 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், போதுமான டாக்ஸிவே மற்றும் ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாததால், பெரிய ரக விமானங்களை கையாளுவதிலும் சென்னைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்துக்காக தேவைப்படும் 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அந்த நிலத்தை தமிழக அரசு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்சிகளும் ஆட்சிகளும் மாறினாலும், நீண்ட கால தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையத்திற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு முக்காடு போட திட்டமா?... சி.எம்.விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!