×
 

காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

காசா இனப்படுகொலையை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காசாவில் நடக்கும் இனப்படுகொலை நெஞ்சை கலங்கச் செய்கிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, உணவுக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. உணவில்லாமல் மக்கள் தவிப்பதோடு, உணவு வழங்குபவர்களையும், உதவி செய்பவர்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்துகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், செல்வப் பெருந்தகை, வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும் என்ற தலைப்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன உரையாற்றினார். காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்து காத்திருந்தபோது 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்து இருப்பதாகவும், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்துச் சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாயார் இறந்த சோகத்தில் பிரேமலதா விஜயகாந்த்... முதல் ஆளாக நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

காசாவில் நடக்கும் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரம் என்று பார்க்க கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். காசாவை மறு கட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் 14ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு யாருடன் போராடும்? கொஞ்சம் சொல்லுங்க... ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share