தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
தமிழர்கள் கர்நாடக வனத்துறையில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவனத்திற்கு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்காவதாக உடன் சென்ற மகிமை தாஸ் படுகாயமடைந்து மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் எல்லைப் பகுதியில் வாழும் தமிழ் மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியதோடு, இரு மாநிலங்களிலும் அரசியல் விவாதங்களையும் தூண்டியுள்ளது.சம்பவம் நடந்த இடம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைக்கு அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா அல்லது ஹோலேமுராடி வனப்பகுதி. இப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். பலர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளிலிருந்து பல தலைமுறைகளுக்கு முன் குடிபெயர்ந்து இங்கு கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினர் கூறுவதுபோல், அன்று இரவு மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் சில காட்டுக்குள் சென்று தொலைந்துவிட்டன. புலி அல்லது சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கிவிடும் அச்சத்தில் அந்தோணிசாமி உள்ளிட்ட நால்வரும் மாடுகளைத் தேடி காட்டுக்குள் சென்றனர். நீண்ட நேரம் தேடிய பிறகு மாடுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓரிடத்தில் ஓய்வெடுத்து உறங்கினர். அப்போது வனத்துறையினர் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மருத்துவத்துறைக்கு 115 அறிவிப்புகள்.! விஜய் அரசின் ஸ்மார்ட் மூவ்... அமைச்சர் அருண் ராஜ் பேரவை உரை..!
தமிழக சட்டப்பேரவையில் இந்த விவகாரம் சிறப்பு கவன ஈர்ப்புக்கு உள்ளானது. நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு கூடிய அவையில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்தை விவாதிக்கக் கோரினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்தார். சபாநாயகர் உரிய நேரத்தில் அமைச்சர்களின் பதில்களைப் பெற்று அவையில் தெரிவிப்பதாக உறுதியளித்தார். இதனால் சட்டப்பேரவையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.கர்நாடக மாநிலத்திலும் இந்தச் சம்பவம் சட்டசபையில் விவாதமாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பட்டா வழங்க சிறப்பு திட்டம்..! மக்களுக்கு குட் நியூஸ்... பேரவையில் செங்கோட்டையன் அறிவிப்பு..!!