×
 

நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!

திருச்செந்தூரில் ஒப்பந்த பணியாளர் ஒருவர் பாதாள சாக்கடைக்குள் விழுந்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த இறப்புகள் அதிகமானதும், `பாதாளச் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க்குகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வைக்கக் கூடாது’ என்று 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. பிறகு, பாதாளச் சாக்கடையையும் செப்டிக் டேங்க்கையும் சுத்தம் செய்வதற்கு இயந்திரங்கள் அதிகமாக வாங்கப்பட்டன. இருப்பினும் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. மேலும் அவ்வாறு சுத்தம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்ததில் விஷவாயுத்தாக்கி ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருச்செந்தூர் நகராட்சி பகுதியை சுற்றி உள்ள இடங்களில், எந்தெந்த பகுதிகளில் பாதாள சாக்கடைகள் வெளியே வருகிறதோ, அதனை உடனடியாக திறந்து சரி செய்து அதனை சீரமைக்கும் முயற்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் கடலலையாய் திரண்ட பக்தர்கள்..!

அந்த வகையில் இன்று காலை கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மணி என்ற 40 வயது ஒப்பந்த தொழிலாளி, சக பணியாளர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாதாள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாதாள கழிவுநீர் கால்வாய்க்குள் மணி தவறி விழுந்தார். அப்போது, அவரை விஷவாயு தாக்கியதில், தூய்மைப்பணியாளர் மணி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் மணியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share