ஏடிஎம்மில் கருப்பு அட்டையைச் செருகி நூதன கொள்ளை.. வசமாக சிக்கிய வடமாநில கும்பல்..!
திருவான்மியூரில் ஏடிஎம்மில் நூதன முறையில் திருட முயன்ற உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் இரவு பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் அவர்களே டிமிக்கி கொடுத்துவிட்டு கைவரிசை காட்டிவிட்டு செல்கின்றனர் சில கில்லாடி கும்பல். காவல்துறையும் அவர்களை தீவிரமாக தேடி பிடித்து அவர்கள் பாணியில் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி தான் வருகின்றன.
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கறுப்பு நிற அட்டையை செருகி வைத்துள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் அட்டையைச் செலுத்தி பணம் எடுக்கும்போது பணம் வெளியே வராமல் இருந்ததால், பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு கொள்ளையர்கள் இயந்திரத்தில் செருகி வைத்திருந்த கறுப்பு அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு.. ஐஎஸ்ஐ-உடன் நெருக்கமாக இருந்த உ.பி இளைஞர் கைது..!
இதனிடையே அட்டையை வைத்த பிறகு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தபோது, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்த பின்னரும் பணம் வராததால் இயந்திர கோளாறு என நினைத்துக் கொண்டு தனது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி தலைமை இடத்திலிருந்து, திருவான்மியூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் மர்ம நபர்கள் சிலர் இயந்திர கோளாறை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளனர் என அலர்ட் செய்துள்ளனர். தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் வந்து பார்த்தபோதுதான் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கருப்பு அட்டையை வைத்து இயந்திரத்தில் கோளாறு ஏற்படுத்தி விட்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஏடிஎம்க்குள் இருந்த சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில், இரண்டு பேர் ஏடிஎம்க்குள் வந்து பணம் வெளியே வரும் பகுதியில், கறுப்பு நிற அட்டையை செருகி வைத்துவிட்டு செல்கின்றனர். பின்னர் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் சென்ற பிறகு அவர்கள் மீண்டும் உள்ளே வந்து பணத்தை அசால்ட்டாக எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங்(26), பிரிட்ஜ் பான்(30), ஸ்மித் யாதவ்(33), ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டும் இந்த கும்பலிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் என்ட்ரி.. சிக்கிய 4 சீனர்கள்..!