"யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!
இயக்குநர் பாரதிராஜா மறைந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர் பாரதி ராஜா. கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். மேலும், உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இதிலிருந்து மீண்டு வந்த பாரதிராஜா வீட்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். தீவிர நுரையீரல் தொற்றுக்காக பாரதிராஜா வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நல குறைவால் உயிர் இழந்தால் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் மண் மற்றும் மக்கள் மீது பேரன்பு கொண்ட பாரதிராஜாவுக்கு தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதாகவும் கூறியுள்ளார். ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர். திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர். தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் பாரதிராஜா என்று தெரிவித்தார். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும் என்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில் பாரதிராஜா ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி என்று தெரிவித்தார். மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த பாரதிராஜாவுக்கு, கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!