அனுமதி கிடைக்குமா..? பைக் டாக்சி விவகாரம்..! உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.!!
பைக் டாக்ஸி அனுமதி தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் முக்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆப் அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை முறைப்படுத்தவும், சட்டப்படி உரிமம் வழங்கி இயக்க அனுமதிக்கவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவில், மத்திய அரசு வழிகாட்டுதல்கள் உள்ள நிலையிலும் மாநிலத்தில் தெளிவான கொள்கை இல்லாததால் ஓட்டுநர்கள் அபராதம் மற்றும் வாகனப் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
விசாரணையின் போது அரசு தரப்பு தெரிவித்தது என்னவென்றால், பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. அதுவரை தமிழகத்தில் இத்தகைய சேவைக்கு அனுமதி இல்லை என்றும், விதிகளை மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தென் மண்டல போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு பைக் டாக்சி சேவையின் பாதுகாப்பு அம்சங்கள், ஒழுங்குமுறை தேவைகள், ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் அக்ரிகேட்டர் நிறுவனங்களின் பொறுப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்யும். குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆறு மாத காலத்திற்குள் மாநில அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: 8 கோடி பேருக்கு வேலை..! பைக் டாக்சியை அனுமதிக்கணும்.. நிதின் கட்கரி வேண்டுகோள்..!!
மேலும் போக்குவரத்துத் துறை செயலர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற ஆப் சேவைகள் மூலம் பைக் டாக்சிகள் இயங்கி வருகின்றன. ஆனால் அவற்றை முறைப்படுத்தும் தனி விதிமுறைகள் இல்லாததால் காவல் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத்திய அரசு சில மாநிலங்களில் அனுமதி வழங்க அனுமதித்துள்ள நிலையில், தமிழகம் இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவில்லை. இந்தக் குழுவின் பரிந்துரைகள் வந்த பிறகே அனுமதி வழங்குவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிப்பதா என்பது முடிவாகும்.
இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!