×
 

இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் நிர்வாக இதயமான சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் மனிதவள மேலாண்மைத் துறையில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திலும், 10 தளங்கள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் மாநிலத்தின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகள் இயங்குகின்றன. இங்கு 54 துறை செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வளாகத்தில் தினசரி பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நீடிக்கும். உணவு இடைவேளை அரை மணி நேரமாகும். இதுவரை கையொப்ப முறையில் வருகைப் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் (கைரேகை) மற்றும் முகம் கண்டறியும் (Face ID) தொடுதிரை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று முதல் இந்த முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகை, தாமதம், முன்கூட்டிய வெளியேற்றம் உள்ளிட்டவை துல்லியமாகப் பதிவாகும். இந்த நடவடிக்கை நிர்வாக ஒழுக்கத்தை அதிகரிக்கவும், பணி நேரத்தை முறையாகப் பயன்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆட்சியின் போது தலைமைச் செயலகம் முழுவதும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டபோது, தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. தற்போது மீண்டும் மனிதவள மேலாண்மைத் துறையில் தொடங்கியுள்ள இந்த முயற்சி, படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. 

அரசு அதிகாரிகள் கூறுகையில், “நிர்வாகத்தை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் இத்தகைய நவீன முறைகள் அவசியம்” என்றனர். ஊழியர்கள் தரப்பில் சிலர் தொழில்நுட்பப் பிரச்னைகள், தனியுரிமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தினாலும், பெரும்பாலானோர் இந்த மாற்றத்தை வரவேற்கின்றனர். இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்திருத்த முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் முழு செயலக வளாகத்திலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share