மோடி, அமித்ஷா பிரசாரம் வீண்?! வெற்றி வாய்ப்பு யாருக்கு! அறிக்கை கேட்கிறது பாஜக தலைமை!
பா.ஜ., போட்டியிட்ட, 27 தொகுதிகளில், வெற்றி யாருக்கு சாதகமாக உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, தொகுதி பொறுப்பாளர்களுக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்ட 27 தொகுதிகளில் வாக்காளர்கள் காட்டிய ஆர்வத்துக்கான காரணம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கட்சி மேலிடம் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. இந்த முறை 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 18 தொகுதிகளில் தி.மு.க.வுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே பொறுப்பாளர்களை நியமித்து பிரசாரப் பணிகளை கட்சி தீவிரப்படுத்தியிருந்தது.
2021 சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை இரட்டை இலக்க எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் இலக்குடன் கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பீயூஷ் கோயல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிரான கோவம் வெளிப்பட துவங்கியுள்ளது!! தென் தமிழகம், டெல்டா, கொங்கு பகுதியில் வெற்றி உறுதி - அண்ணாமலை!
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், பா.ஜ.க. மேலிடம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்கள் மற்றும் மகளிர் யாருக்கு ஆதரவு அளித்தனர், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்ததற்கான காரணம் என்ன, பா.ஜ.க. வேட்பாளருக்கு எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாக உள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிக்கையை இரு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தேர்தல் பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு தொகுதியின் உண்மை நிலவரத்தையும், வாக்காளர்களின் மனநிலையையும் துல்லியமாக அறிய விரும்புகிறது கட்சி தலைமை. அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படும்” என்றார்.
இந்த அறிக்கை பா.ஜ.க.வின் எதிர்கால உத்திகளுக்கும், தமிழக அரசியலில் கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிவுகள் வெளியான பிறகு இந்த அறிக்கை கட்சியின் செயல்திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! கோடிகளில் கொட்டும் திமுக! சளைக்காத அதிமுக!